கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இம்மாதம் 10 ஆம் திகதிக்குள் அரசு முடிவு செய்யும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர்,
"பாடசாலை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்கு இடையில் கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இறுதி முடிவு இன்னமும் எட்டப்படவில்லை.
கல்வி அமைச்சின் குழு ஒன்று அண்மைய நாட்களில் அனைத்து மாகாணங்களுக்கும் சென்று பாடசாலைகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதும் அதிபர்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தப்பட வேண்டும். இது குறித்து அனைத்து தனியார் மற்றும் அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.'
மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும்போது, அவர்களில் பலர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றார்கள். அவர்களால் பாடசாலை மற்றும் பொது பஸ்களில் சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாது.
சுகாதார அதிகாரிகளின் கருத்துப்படி, கொரோனாத் தாக்கம் இருந்தால்கூட அதன் ஆணிவேரைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். அதனால்தான் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக போக்குவரத்தை ஒதுக்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம். இது ஒரு சுலபமான காரியம் அல்ல. இருப்பினும் நாங்கள் அதைச் செய்ய முயற்சிக்கிறோம்.
அத்தோடு பாடசாலைகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்களில் ஒவ்வொரு வகுப்பறையிலும் நாற்காலிகள் இடையேயான தூரம், மாணவர்கள் அடிக்கடிக் கைகளைக் கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.
இருப்பினும், ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. ஏனெனில், அவர்கள் முகக்கவசம் அணிவது நடைமுறையில் இருக்காது" - என்றார்.